Tuesday, November 4, 2008

சரித்திரம் படைக்கப்பட்டது !!!! மாற்றம் சாத்தியம் ஆகி விட்டது !!!!


என்னைப்போலவே பெரும்பான்மையான ப்லாகுலக நண்பர்களும் நண்பிகளும் ஒபாமாவின் வெற்றியை பார்த்து மகிழ்ந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்!!!

ஒபாமாவின் வெற்றியை கறுப்பின மக்கள் ஆனந்த கண்ணீரோடு கொண்டாடியதை தொலைக்காட்சியில் பார்த்தோம். நூற்றியைம்பது ஆண்டுகளுக்கு முன் அடிமைத்தனம் ஒழிக்கப்பட்டாலும், பல ஆண்டுகள் இனவெறி தாக்குதல்களுக்கு ஆட்பட்டு, பல தலைமுறைகளாக சம உரிமைக்காக போராடி, இன்று சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒரு தேர்தல் முடிவு அமெரிக்காவில் சாத்தியமாகியிருக்கிறது. ஒபாமாவின் வெற்றி செய்தியை கேட்க சிகாகோ கிராண்ட் பார்க்கில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு நடுவில் கண்களில் கண்ணீரோடு சிவில் உரிமை போராளிகள் அந்த வெற்றியை கொண்டாடியது மிகவும் நெகிழ்ச்சியானது.

ஒபாமாவை பெரும்பான்மையான வெள்ளை மற்றும் லத்தீன் அமெரிக்க (ஹிஸ்பானிக்) இனத்தவரும் தேர்ந்தெடுத் திருப்பது மிகவும் சரித்திர முக்கியத்துவம் வாய்ந்தது. ஒரே சமூகத்தில் வாழ்ந்தாலும் ஒருவகை இன வேறுபாட்டு சிந்தனையோடு வாழ்ந்து வந்த இந்த மக்களை பிணைக்கும் சக்தியாக ஒபாமா மாறியிருப்பது கவனிக்கத்தக்கது....

நான்கு வருடங்களுக்கு முன் இலினாய் செனட்டராக ஒபாமா தேர்ந்தெடுக்கப்பட்டபோது அவர் இந்த ஜனாதிபதி போட்டியில் இடம்பெறுவாரா என்பதே கேள்விக்குறியாக இருந்தது.

இந்த வெற்றிக்கு புஷ் மேலிருந்த வெறுப்பும், சாதாரண அமெரிக்க குடிமகன் இன்று சந்திக்கும் பொருளாதார பிரச்சினைகளும் ஒரு காரணம்தான்.

அதே சமயம், இந்த இருபத்தியோராம் நூற்றாண்டிலும் இந்தியாவில் எப்படி ஜாதி பாகுபாடுகள் இன்றும் நீடிக்கின்றனவோ அதே மாதிரி, அமெரிக்காவிலும் இன வெறிக்கொள்கையாளர்கள் இன்றும் மிக அதிகமாகவே இருக்கின்றனர். அதையும் தாண்டி ஒபாமா வெற்றி பெற்றதற்கு மூன்று முக்கிய காரணங்கள் உள்ளன.

முதலில், ஒபாமா போர் நிறுத்தம் செய்து, இராக்கிலிருந்து அமெரிக்க படைகளை வாபஸ் பெறப்போவதாக அறிவித்தது.

இரண்டாவது காரணம், ஒபாமாவின் மிகவும் சாணக்கியத்தனமான பிரச்சார வியூகங்கள், மற்றும் தனக்கான வாக்கு வங்கியை ஏற்கனவே இருக்கும் பிற வாக்கு வங்கிகளிலிருந்து பிரிப்பதில் அதிக நேரம் செலவிடாமல், தனக்கென ஒரு வாக்கு வங்கியை உருவாக்கியது. அதாவது, வழக்கமாக ஓட்டுச்சாவடிகளுக்கு செல்லாத பெரும்பான்மை ஜனநாயக கட்சி ஆதரவாளர்களை ஓட்டுப்போட வைத்தது, இளைஞர்கள், முதல் முறை வாக்காளர்கள், பெண்கள் போன்றவர்களை தன் பக்கம் ஈர்த்தது, யார் என்ன திசைத்திருப்பினாலும், அழுத்தம் திருத்தமாக அமெரிக்காவின் பொருளாதார பிரச்சனையை முன்வைத்தே பிரச்சாரம் செய்தது போன்ற நடவடிக்கைகள் அவரது வெற்றியை உறுதிப்படுத்தின.

மூன்றாவது காரணம், அமெரிக்க சரித்திரத்தில் 1970 களின் ஆரம்ப காலத்திற்கு பிறகு இந்த தேர்தலில்தான் மக்கள் நீண்ட கியூ வரிசையில் நின்று தங்களது ஓட்டு சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தலில் பதியப்பட வேண்டும் என்று விரும்பி தவறாமல் ஓட்டு போட்டது....வழக்கமாக 30% வாக்குகள் பதிவாகும் இடங்களில்கூட இந்த முறை 80% வாக்குகள் பதிந்தாக செய்திகள் கூறுகின்றன. இந்த அளவிற்கு வாக்கு பதிவு முந்தைய தேர்தல்களில் இருந்திருந்தால் அமெரிக்க 8 வருடங்கள் கஷ்டப்பட்டிருக்க வேண்டிய நிலையே ஏற்பட்டிருக்காது என்பது பலரது கருத்து !!!!!!

லிண்டன் ஜான்சனிற்கு பிறகு அமெரிக்க காங்கிரசிலும் மிகப்பெரிய பலத்தோடு பதவிக்கு வந்திருக்கும் ஜனாதிபதி ஒபாமா தான். இந்த வெற்றியை விட, இனிமேல் ஒபாமா செயல்பட போகும் விதம்தான் மிகவும் முக்கியமானது. அவரது ஒவ்வொரு செயலும் அமெரிக்காவில் வாழும் ஓட்டு மொத்த கறுப்பின மக்களின் செயல்திறனோடு ஒப்பு நோக்கப்படும். ஒபாமா இனி மீடியாவின் மைக்ரோ ஸ்கோப் பார்வையின் கீழ் வைக்கப்பட்டு, விமர்சிக்கப்படுவார்....இதை ஒபாமா எப்படி எதிர் கொள்வார், அமெரிக்கா இன வேறுபாடுகளை கடந்து சமமான வாய்ப்புகளை அனைவருக்கும் வழங்கக்கூடிய தேசம் என்பதை அமெரிக்க மக்கள் தங்களது ஓட்டுக்கள் மூலம் நிரூபித்துவிட்டனர். கொடுக்கப்பட்ட வாய்ப்பை எப்படி ஒபாமா பயன்படுத்தப்போகிறார் என்பதுதான் இப்போது உலகமே ஆவலுடன் எதிர்பார்க்கும் ஒரு விஷயம் !!!!!
தனது அபரிமிதமான வெற்றியின் மூலம் சரித்திரம் படைத்த ஒபாமா அந்த வெற்றியை தனது செயல்திறனால் தக்கவைத்துக் கொள்வதிலும் சரித்திரம் படைப்பாரா என்பது ரொம்ப ரொம்ப முக்கியமா கவனிக்க வேண்டிய விஷயம்.....

Thursday, October 30, 2008

பதினேழு வயசு தொட்டில் குழந்தை !!!!


ஒரு படத்தில குழந்தை இல்லாத கௌண்டமணி வீட்டுக்குள்ள செந்தில் நுழைஞ்சி, குழந்தை இல்லாத ஏக்கத்தில மனநிலை சரியில்லாத கௌண்டமணி மனைவி வெறும் தொட்டில் ஆட்டிட்டு இருக்கும்போது அந்த வெறும் தொட்டில்ல போய் செந்தில் படுத்துக்குவாறு....அந்தம்மாவும் தாலாட்டு பாடுவாங்க...கௌண்டமணி பாத்து ஆடிபோயிடுவாறு....உங்களுக்கு ஞாபகம் இருக்கா அந்த நகைச்சுவை காட்சி???
அதே மாதிரி சம்பவம் இங்க அமெரிக்காவில் நெப்ராஸ்கா மாகாணத்தில் நடந்துக்கிட்டு இருக்கு....நெப்ராஸ்கா கவர்னரும், சட்ட வல்லுனர்களும் நல்லா ஆடித்தான் போயிருக்காங்க....

நம்ம ஊரு மாதிரியே, பணக்கார தேசம்னு சொல்லப்படற அமெரிக்காவுலையும் சிசு கொலை, பிறந்த குழந்தையை குப்பைத்தொட்டியில போடறது எல்லாம் நடக்குது.

நியூ யார்க் நகரத்தில paramedic (அவசர சிகிச்சையாளர்) வேலை பாத்த திமோதி ஜக்கார்த் என்பவர் ஒரு முறை கழிவறை கோப்பையில் பெற்ற தாயாலேயே மூழ்கடித்து கொல்லப்பட்ட பிறந்து ஓரிரு நாட்களே ஆனா குழந்தையை எடுத்து அடக்கம் செய்ய உதவி செய்ய போனார். கொல்லப்பட்ட குழந்தையின் அவல நிலை அவரை ரொம்ப பாதிக்க தன்னுடைய சொந்த முயற்சியில் சிசு கொலை செய்வதை தடுக்க ஒரு AMT children of hope அப்படின்னு ஒரு தொண்டு நிறுவனம் ஆரம்பிச்சார். பெற்றோர்கள் வேண்டாத குழந்தைகளை கொல்லாம, தூக்கி கண்ட இடத்தில் எரிஞ்சிடாம அந்த நிறுவனத்திடம் சேர்த்துவிட்டால் , அவர்களே அந்த குழந்தைகளை சரியான தம்பதிகளுக்கு தத்து கொடுத்துடுவாங்க. தத்து எடுக்கப்படும்வரை , அவங்களே குழந்தைகளை வளக்கவும் செய்வாங்க.

திமோதி மற்றும் NHSA அப்படின்னு சொல்லப்படுற நிறுவனமும் எடுத்த தொடர் முயற்சியில அமெரிக்காவில் கிட்டத்தட்ட 48 மாகாணங்கள் "பாதுகாவல் சட்டம்" (Safe Haven Law) அப்படின்னு ஒரு சட்டம் கொண்டு வந்திருக்காங்க. அந்த சட்டப்படி ஒரு குழந்தையின் பெற்றோர் அந்த குறிப்பிட்ட மாநிலத்தில் பாதுகாப்பான இடம் (safe haven) என்று அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது இடங்களில் (மருத்துவமனை, காவல் நிலையங்கள், தீயணைப்பு நிலையங்கள்....) வேண்டாத தங்கள் குழந்தையை விட்டு விட்டு போய் விடலாம். அந்த பெற்றோர் மேல எந்த சட்ட நடவடிக்கையும் எடுக்கப்படாது.

போன ஜூலை மாசம் நெப்ராஸ்கா, அலாஸ்கா ஆகிய இரண்டு மாகாணங்களும் இதே மாதிரி சட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்தாங்க. இதுவரைக்கு எல்லாம் நல்லா தான் நடந்தது.

நம்ம நெப்ராஸ்கா அண்ணாச்சிங்க என்ன செஞ்சாங்கன்னா சட்டத்தில "இந்த வயசுவரைக்கும் உள்ள குழந்தைங்க தான் அனாதையா பாதுகாப்பு புகலிடங்களில் விடப்படனும்னு" எந்த வயது வரம்பும் சொல்லலை. அதாவது மேஜர் ஆகாத எல்லா "குழந்தைகளுக்கும்" அந்த சட்டம் செல்லும். அது மட்டுமில்லாம, மத்த மாகாணங்களில் இருந்து குழந்தைகள் கொண்டு வந்து நெப்ராஸ்காவில் விடப்பட்டா என்ன செய்வாங்கன்னும் இந்த சட்டத்தில எதுவும் சொல்லலை. அதோட விட்டாய்ங்களா??? பெற்றோர் மட்டுமில்லாம , குழந்தைகளை பாத்துக்கிற ஆயாவில இருந்து ஆட்டுக்குட்டி வரைக்கும் ஆரு கொண்டு விட்டாலும் சட்டம் ஒன்னும் சொல்லாது அப்படின்னு வேற சட்டத்தில சொல்லிட்டாங்க.

இது போதாதா???

ஏதோ மந்தையில ஆடுங்களை மேச்சலுக்கு விடற மாதிரி, கட கடன்னு சுமார் 25 "குழந்தைகள்" நெப்ராஸ்கா மாநிலத்தில் பாதுகாப்பு புகலிடங்களில் விடப்பட்டாங்க.

விடப்பட்ட குழந்தைங்களுக்கு என்ன வயசு இருக்கும்னு நினைக்கிறீங்க? 12, 13, 15 அப்படின்னு கூடிக்கிட்டே போய் 17 வயசு பையங்கன்னு வந்து நிக்கிது. விட்டவங்களை குறை சொல்ல முடியாது...19 வயசு ஆகாதவங்க எல்லாம் சட்டப்படி குழந்தைங்க தானே???

இதுல என்ன தமாசுன்னா "infants, toddlers" அப்படின்னு சொல்லப்படுற பிறந்த குழந்தைங்க, சில மாதங்களான குழந்தைங்க, சிறுவர் சிறுமிங்க யாருமே இந்த பாதுகாப்பு மையங்களிலே விடப்படவில்லை.

சொன்ன பேச்சை கேக்காத டீனேஜ் பசங்க, மனநிலை பாதிக்கப்பட்ட விடலை பருவ சிறுமிகள் அப்படின்னு இஷ்டத்துக்கு பெற்றோர்கள், தாத்தா பாட்டிகள் கொண்டு வந்து விட்டு விட்டு போயிட்டாங்க.

ஒரு 34 வயசு ஆளு, தன்னோட 10 குழந்தைகளில் 9 குழந்தைகளை நெப்ராஸ்கா மருத்துவமனை ஒன்றில் விட்டுட்டு போய்ட்டார்.(அதுல ஒரு "குழந்தையின்" வயது 17, அதாவது அந்த ஆளு 17 வயசிலேயே முதல் குழந்தை பெற்றிருக்கிறார்...தலை சுத்துது சார் !!!!) இன்னொரு அம்மா மிச்சிகன் மாகாணத்திலிருந்து 700 மைல்கள் காரில் தன்னுடைய 13 வயது மகனை கூட்டி வந்து நெப்ராஸ்கா மருத்துவமனை ஒன்றில் நடு ராத்திரியில் விட்டுட்டு போய்ட்டாங்க. மனநிலை பாதிக்கப்பட்ட 13, 15 வயசு சிறுமி மற்றும் சிறுவன், சொன்ன பேச்சை கேக்காமல் ரொம்ப படுத்தின 17 வயசு பசங்கன்னு வஞ்சனையே இல்லாம குழந்தைகளை அனாதையாக்க பறந்து விரிஞ்ச அமெரிக்காவின் எல்லா மாகாணங்களில் இருந்தும் பெற்றோர்களும், தாத்தா பாட்டிகளும், மாற்றான் தாய் தந்தையரும் நேப்ராஸ்காவை நோக்கி படையெடுக்க ஆரம்பிச்சிட்டாங்க.

பொதுவா சட்டதிட்டங்களை மதிக்கிற அமெரிக்க பொது ஜனம் இந்த அளவுக்கு ரொம்ப "ஓவரா" சட்ட திட்டங்களை மதிப்பாங்கன்னு நெப்ராஸ்கா மாநில அரசு எதிர்பார்கலை. கொஞ்சம் அரண்டு தான் போய்ட்டாங்க....

இப்போ நெப்ராஸ்கா மாகாண கவர்னர் அவசரமா மாநில சட்டசபை நவம்பர் 14 ம் தேதி கூடும்னு அறிவிச்சிருக்கார். குழந்தைகளை பாதுகாப்பு மையங்களில் ஒப்படைக்க தாய்க்கு குழந்தை பிறந்த பிறகு 3 நாட்கள் தான் அவகாசம் அப்படின்னு ஒரு கால வரையறையோடு கூடிய சட்ட திருத்தத்தை அவசரமா கொண்டு வரப்போரய்ங்களாமாம் !!!! நல்லா கூத்தடிக்கிறாய்ங்க !!!!!

நல்ல வேலையா நம்ம ஊரிலே சின்ன அளவில ஒரு தொட்டில் செஞ்சி அதுலதான் கொழந்தையை போட்டுட்டு போகணும்னு அரசாங்கம் ஐடியா செஞ்சாங்க...இல்லைன்னா நம்ம ஊர் நாட்டுலையும், பட்டணத்துலையும் கூட இந்த மாதிரி கூத்துங்க அரங்கேறியிருக்க வாய்ப்பிருக்கு....

நினைவு தெரிஞ்ச, வயது வந்த கொழந்தைங்களை கொண்டு வந்து விட்டா அவங்க மனசளவுல எவ்வளவு பாதிக்க பாடுவாங்கன்னு கூட நினைக்காம அனாதையா விட்டுட்டு போற ஜந்துக்களையெல்லாம் எப்படித்தான் மனுஷங்க லிஸ்டில சேர்த்துக்கறதுன்னு ஒன்னும் புரியலை.....ஆனா அதே சமயம் அப்படிப்பட்ட ஏழ்மையான சூழ்நிலைக்கு அந்த பெற்றோர் தள்ளப்படறாங்களோன்னும் நினைக்க தோணுது... அதுவும் இல்லாத பட்சத்தில, இந்த மாதிரி பிள்ளைங்களை பத்தி சுத்தமா கவலையில்லாத அப்பா அம்மா கிட்ட இருக்கிறதைவிட அனாதையா விடப்படுவது ஒன்னும் பெரிய கஷ்டம் இல்லையோன்னும் தோணுது....
எப்படி இருந்தாலும், அடுத்த தலைமுறையை நல்ல முறையில் அன்பையும் அறிவையும் கொடுத்து நெறிப்படுத்துதல் என்பது ஒவ்வொருத்தருடைய தலையாய கடமை அப்படின்னு எல்லா மக்களும் (அல்லது) பெரும்பான்மையான மக்களாவது உணரும் நாள்தான் நிஜமாகவே குழந்தைகள் தினம்னு கொண்டாடப்பட வேண்டிய தினம்.

குழந்தைகள் தின கட்டுரையை கொஞ்சம் முன்னாடியே எழுதிட்டேனோ ????




Monday, October 20, 2008

இயக்குனர் திரு.ஸ்ரீதர் மறைவுக்கு இரங்கல் !!!!

இயக்குனர் திரு.ஸ்ரீதர் மறைந்ததற்கு எனது மனமார்ந்த இரங்கல்களை தெரிவித்துக்கொள்கிறேன். ஒருசில திறமைசாலிகள் மிக மிக அரிதாகத்தான் பிறப்பாங்க...அந்த மாதிரி ஒரு திறமைசாலிதான் ஸ்ரீதர் என்பது என் கருத்து...ஒருசில பேருக்கு ஒரு சில திறமைகள் ரொம்ப சிறப்பா அமைஞ்சிருக்கும். நம்ம ஸ்ரீதருக்கு சினிமாவை ஒரு visual medium ஆக காட்டும் திறமை ரொம்ப அபாரமா அமைஞ்சிருந்தது. எனக்கு ஸ்ரீதர் படங்களில் என்றும் பிடித்தவை "காதலிக்க நேரமில்லை", "ஊட்டி வரை உறவு", "கல்யாண பரிசு", "நெஞ்சில் ஓர் ஆலயம்", "நெஞ்சம் மறப்பதில்லை" ஆகியவை. இன்னைக்கு வரைக்கும் காதலிக்க நேரமில்லை திரைப்படம்தான் ஒரு நகைச்சுவை திரைப்படம் எப்படி இருக்கனும் என்பதற்கு ஒரு அளவுகோலா, உதாரணமா அமைஞ்சிருக்கு. நகைச்சுவையின் உச்சம் அப்படின்னு காதலிக்க நேரமில்லை படத்தை சொல்லலாம். அதே மாதிரி, கல்யாண பரிசு நகைச்சுவை...ஏதோ நிஜ வாழ்க்கையில் நம்ம கண்ணெதிரில் தங்கவேலு பொய் சொல்றமாதிரியே இருக்கும்!!!!அதேமாதிரி, நுட்பமான உணர்வுகளை கையாண்டு திரைப்படம் எடுக்க ஆரம்பிச்சு மற்ற இயக்குனர்களை அந்த பாதைக்கு இழுத்தது ஸ்ரீதர் தான்...அவரோட சாதனைகளை அடுக்கிக்கிட்டே போகலாம்...ஆனா தமிழ் சினிமாவுக்குன்னு அவர் 3 முக்கியமான சாதனைகள் செஞ்சிருக்கார்.
ஒன்று - இளங்கோவனும், கலைஞர் கருணாநிதியும் தமிழ் சினிமாவில் சுத்தமான தமிழை புகுத்தி, தமிழ் சினிமாவுக்கு ஒரு புத்துணர்ச்சி கொடுத்து, புரட்சி செஞ்சாங்க. அதே வரிசையில், தமிழ் சினிமாவில் பிரேமுக்கு பிரேம் நடிகர் நடிகைகள் நின்று நீண்ட நேரம் மூச்சு விடாம வசனம் பேசிக்கிட்டு இருந்ததை மாற்றி, நிறைய இயல்பான அன்றாட வாழ்கை முறையில் நாம உபயோகிக்கும் பேச்சுக்களை தேவையான அளவு நடிகர்களை பேச வச்சி, தேவையான அளவு முக பாவங்களிலும், சலனங்களிலும் நடிகர்களை நடிக்க வெச்ச பெருமை ஸ்ரீதருக்கு தான். அதாவது முதன் முதலில் சலன படத்தை சலன படமா காட்டின பெருமை அவரை சேரும்.
இரண்டு - "ஸ்ரீதர் படம்" அப்படின்னு கூட்டத்தை திரை அரங்குகளுக்கு கூட்டி வந்தது. முதன் முதலில் ஒரு இயக்குநருக்காக திரைப்படம் பார்க்க மக்கள் திரையரங்குகளை நோக்கி படையெடுத்து ஸ்ரீதருக்காக தான். மூன்று - தாங்கள் தான் கலைக்கு சேவை செய்ய பூலோகத்தில் அவதரிச்ச மாதிரியும், தென்னிந்திய சினிமா கலைஞர்கள் ஆற்றலில் தாழ்ந்து போனவர்கள் மாதிரியும் ஆணவத்தில் இருந்த வட இந்திய சினிமா கலைஞர்களை தன்னுடைய திறமையால் வென்றவர் ஸ்ரீதர். ராஜ்கபூர், ராஜேந்திர குமார், திலீப்குமார், மீனா குமாரி, ராஜ் குமார், அமிதாப் போன்ற மிகப்பெரிய நட்சத்திரங்கள் ஸ்ரீதரின் வெற்றிப்படங்களில் நடிப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தனர். தென்னிந்திய திரை கலைஞர்கள் எத்தனை திறமையானவர்கள் என்பதை அகில இந்திய ரீதியில் நிலைநாட்டியவர்களில் ஸ்ரீதர் மிக மிக முக்கியமானவர்.
எல்லாத்தையும் விட, தனிப்பட்ட முறையில் எனக்கு ரொம்ப பிடிச்ச விஷயம் இன்னொன்னு சொல்லியே ஆகணும். அந்த காலக்கட்டத்தில் வந்த சில வண்ண திரைப்படங்கள் ஒன்னு ஒரே கலர் மழையா இருக்கும், இல்லன்னா நடிகர் நடிகைகள் கொஞ்சம் மாவு தடவின மாதிரி தெரிவாங்க.ஆனா ஸ்ரீதரோட வண்ண திரைப்படங்களில் நடிகர்கள் ரொம்ப pleasant & colourful ஆக தெரிவாங்க. அதுமட்டுமில்லை, முழு படத்தையும் நாலஞ்சு காஸ்ட்யூமை வெச்சே சமாளிச்சாலும் நம்ம கண்ணுக்கு எல்லாரும் குளுர்ச்சியா தெரிவாங்க, சுற்றுப்புறமும் குளுர்ச்சியா தெரியும். ஊட்டியை உண்மையான வண்ணமயமான அழகோட, கொஞ்சம் கூடுதல் அழகா ஸ்ரீதர் படங்களில் பார்க்கலாம். முதல் முதலில் கண்ணை உறுத்தாத வண்ண திரைப்படங்களை துல்லியமாக திரையில் கொண்டுவந்தவர் ஸ்ரீதர் தான்.
நல்ல புகழோட இருந்து நம்மளை மாதிரி நிறைய ரசிகர்களை பெற்று, இன்னைக்கும் அவரை நினைவு வெச்சிக்கிற மாதிரி படங்களை கொடுத்து வாழும்போது பாராட்டப்பட்ட கலைஞரா இருந்தார் ஸ்ரீதர். அவர் கூட சேந்து வேலை செஞ்ச எல்லோரும் ஜாம்பவான்களா இருந்தாங்க. அதனால, தன் திறமைக்கு ஏற்ற பெருமைகளோட, புகழோட வாழ்ந்து மறைஞ்ச ஸ்ரீதருக்கு ஒரு இறுதி வணக்கம் செலுத்துவோம் !!!!!

Thursday, October 16, 2008

நான் கொலை செய்திருந்தால்..... -- பகுதி 2




அமெரிக்கா கால்பந்து சூப்பர் ஸ்டார் ஓஜே சிம்சன் எப்படி தன்னுடைய முன்னாள் மனைவி&ஆண் நண்பரை கொலை செய்ததாக கூறப்பட்ட வழக்கில் எப்படி விடுதலை ஆனார் என்பதை முதல் பகுதியில் பார்த்தோம்.
சிவில் வழக்கு.....
சில மாதங்களிலேயே ஓஜே மீது இரட்டை கொலை குற்றம் சாட்டி சிவில் வழக்கு தொடரப்பட்டது. இந்த முறை ஓஜே கோர்ட்டில் மௌனமாக இருக்க அனுமதிக்கப்படவில்லை. கோர்ட்டில் வக்கீல்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்ட ஓஜே, இரட்டிக் கொலை வழக்கில் கிரிமினல் நீதிமன்றத்தில் கூறிய பொய்கள் சிவில் கோர்ட்டில் நிரூபிக்கப்பட்டன. உதாரணத்திற்கு கொலை நடந்த இடத்தில் பதிவாகியிருந்த ஷூ தடங்கள் ஒரு குறிப்பிட்ட வகையான ஷூவை சேர்ந்தது என்றும் அந்த ஷூவை தான் உபயோகமே படுத்தியதில்லை என்று கிரிமினல் கோர்ட்டில் பொய் கூறியது....சிவில் நீதிமன்றத்தில் அவர் அந்த வகை ஷூ அணிந்த புகைப்படத்தை காட்டியபோது தான் கூறிய பொயக்கான காரணத்தை விளக்க முடியாமல் ஓஜே திணறினார்..... இந்த முறை சிவில் நீதிமன்றத்தில் ஜூரி உறுப்பினர்கள் 17 மணி நேரம் விவாதம் செய்து "ஓஜே நிகோல் மற்றும் ரான் இருவரது மரணத்துக்கு காரணமானவர் தான்" என்று முடிவு அறிவித்தனர்.
அதுமட்டுமல்லாது, ரான் கோல்ட்மன் மற்றும் நிகோல் இருவரது குடும்பத்தாருக்கும் சுமார் 33.5 மில்லியன் டாலர்கள் நஷ்ட ஈடு வழங்குமாறு ஜூரி சிம்சனுக்கு உத்தரவிட்டது.
நான் கொலை செய்திருந்தால்....
நவம்பர் மாதம் 2006ஆம் ஆண்டு, "நான் இந்த கொலையை செய்திருந்தால்" என்ற புத்தகம் . ஓஜே சிம்சனால் எழுதப்பட்டு வெளியிடப்படுவதற்கான ஏற்பாடுகள் நடந்தன. இதுதான் ஓஜேவின் ஒப்புதல் வாக்குமூலம் என புத்தக பதிப்பாளர் பேட்டியே கொடுத்தார். இந்த புத்தகத்தில் "நான் ஒருவேளை கொலை செய்திருந்தால்" என்ற பெயரில் தான் செய்த கொலையை மிக விவரமாக கொலையாளிக்கு மட்டுமே தெரிந்திருக்க கூடிய நுட்பமான தகவல்களை இந்த புத்தகத்தில் பட்டவர்த்தனமாக ஓஜே எழுதியிருந்தார்http://www.law.umkc.edu/faculty/projects/ftrials/Simpson/ifididit.html இது கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தாரை மட்டுமல்லாது பொது மக்களையும் மிகவும் கோபமடைய செய்தது. மிக பெரிய எதிர்ப்பின் காரணமாக புத்தகம் வெளியிடப்படுவது பதிப்பாளர்களால் கைவிடப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அந்த புத்தகத்தின் வெளியீடு உரிமையை கொலை செய்யப்பட ரான் கோல்ட்மன் குடும்பத்தாருக்கு சிம்சன் தரவேண்டிய நஷ்டஈட்டு தொகைக்கு ஈடாக கொடுத்துவிட்டது. எனவே ரான் கோல்ட்மன் குடும்பத்தார் அந்த புத்தகத்திற்கு "நான் இந்த கொலை செய்திருந்தால்-கொலையாளியின் வாக்குமூலம்" என்று பெயர் மாற்றி வெளியிட்டனர். அது வழக்கம்போல் விற்பனையில் முதல் இடத்தை சீக்கிரமே பிடித்தது.
செப்டம்பர் 16, 2007......
லாஸ் வேகாஸ் நகரத்தில் ஒரு ஹோட்டல் ரூமுக்குள் புகுந்து விளையாட்டு நினைவு பொருட்களை விற்பனை செய்யும் ஒருவரை துப்பாக்கி முனையில் தன் சகாக்கள் உதவியோடு மிரட்டி அவரிடமிருந்து தான் சம்பந்தப்பட்ட சில பொருட்களை திருடியதாக குற்றம் சாட்டப்பட்டு ஓஜே சிம்சன் கைது செய்யப்பட்டார், ஜெயிலில் அடைக்கப்பட்டார். திருட்டு, பயங்கரமான ஆயுதங்களை திருட்டுக்கு உபயோகித்தது, கடத்தல் முயற்சி உட்பட கிட்டத்தட்ட ஏழு வழக்குகள் ஓஜே மீது தொடரப்பட்டன.
அக்டோபர் 3, 2008
ஓஜே சிம்சன் திருட்டு, கடத்தல் முயற்சி உட்பட பல பயங்கரமான குற்றங்கள் செய்ததாக தீர்ப்பு வழங்கப்பட்டது. அக்டோபர் 3, 1995 ஆம் ஆண்டு இரட்டை கொலை வழக்கில் அனைவரும் அதிர்ச்சியடையும்படியாக விடுதலையான சிம்சன், சரியாக 13 ஆண்டுகள் கழித்து அதே அக்டோபர் 3 ஆம் தேதி கிட்டத்தட்ட தன் வாழ்நாள் முழுதும் ஜெயிலிலேயே கழிக்கக்கூடிய நிலையை எட்டினார். எத்தனை ஆண்டுகள் ஜெயில் வாசம் என்பது டிசம்பர் 5 ஆம் தேதி தெரிய வரும். ஆனால் கிடைக்கக்கூடிய தண்டனை கடுமையான நீண்ட சிறைவாசமாக இருக்கும் என்று அனைவரும் கூறுகின்றனர்....
துடிக்க துடிக்க இரண்டு உயிர்களை மிக மிக கொடூரமாக கொலை செய்து விட்டு திறமையான வக்கீல்கள் உதவியோடு சட்டத்தின் பிடியிலிருந்து தப்பி, அந்த மமதையில், ஆணவமாக தான் கொலை செய்ததையே ஒரு புத்தகமாக எழுதி சட்டத்தையும், சமூகத்தையும் ஒரே சமையத்தில் எள்ளி நகையாடிய ஓஜே சிம்சன் சரியாக பதிமூன்று ஆண்டுகள் கழித்து தனது வாழ்கை முழுதும் ஜெயிலில் கழிக்கக்கூடிய தண்டனையை எதிர்பார்த்து கம்பி எண்ணிக்கொண்டு இருக்கிறார்....சாமர்த்தியமாக சட்டத்தின் பிடியிலிருந்து தப்பிக்கலாம்,ஆனால் நீண்ட காலம் நீதியின் பிடியிலிருந்து தப்பிக்க முடியாது என்பதற்கு சிம்சன் ஒரு வாழும் உதாரணம்......பதிமூன்று ஆண்டுகளுக்கு முன் தின்ற உப்புக்கு இப்போதான் சிம்சன் தண்ணி குடிச்சிட்டு இருக்கிறார்....



Tuesday, October 14, 2008

நான் கொலை செய்திருந்தால்....-- பகுதி 1

நம்ம நாட்டில் மட்டுமல்ல உலகத்துல எல்லா நாடுகளிலும் பணம் இல்லாதவங்க சின்ன சின்ன சில்லரை குற்றங்கள் செஞ்சிட்டு விசாரணை கைதியாகவே பல மாதங்கள் அல்லது வருஷங்கள் ஜெயிலிலே இருக்கிறதும், நம்ம நாட்டிலே ஆயுள் தண்டனை கைதிகள் அரசியல் காரணங்களுக்காக கிட்ட தட்ட 17 வருஷங்கள் கூட ஜெயிலிலே இருக்கிறதும் சாதாரணம்....அதே சமயம் பணக்காரங்க பெரிய குற்றம் செஞ்சிட்டும் அப்பட்டமா பண பலத்தை வச்சி தண்டனையே கிடைக்காம தப்பிக்கறதும் நடந்துகிட்டு தான் இருக்கு....இதே மாதிரி தன் பண பலத்தை வச்சி மிக புத்திசாலித் தனமான வக்கீல்களை துணைக்கழைத்து கொலை குற்றத்தில் இருந்து தப்பிச்சவர்தான் அமெரிக்காவின் முன்னாள் கால்பந்து (கைபந்து???? ஏன்னா, அமேரிக்காவில் கால்பந்தை கையால் விளையாடறாங்க) சூப்பர் ஸ்டார் ஓஜே சிம்சன். அமெரிக்காவில் செல்லமாக அவரை ஓஜே என்று அழைப்பார்கள்....

ஜூன் 12, 1992(ஞாயிறு)

லாஸ் ஏஞ்சலீஸ் நகரின் பணக்கார பகுதியில், நிகோல் பிரவுன் சிம்சன் (சிம்சனின் முன்னாள் மனைவி) மற்றும் அவரது ஆண் "நண்பர்" ரான் கோல்ட்மன் இருவரும் நிகோலின் காண்டோமினியம் வகை வீட்டிற்கு வெளியில் கொடூரமாக கொலை செய்யப்பட்டார்கள். ஒரு அடையாளம் தெரியாத ஆண் நிகோலின் கழுத்தை கிட்டத்தட்ட தலையே துண்டிக்கப்படும் அளவிற்கு அறுத்து கொன்றான். ஆண் நண்பரையும் 30 முறை கத்தியால் குத்தி கொன்றான். நள்ளிரவுக்கு பின் நிகோலின் ரத்தம் பூசிய நாயை கண்டு அதே பகுதியில் வசித்த ஒருவர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்து கொலை விசாரணையும் ஆரம்பித்தது.

அதேநாள் இரவு சிம்சனை விமான நிலையம் அழைத்து செல்ல அவரது வீட்டிற்கு 10:25 மணிக்கு வந்த லிமௌசின் கார் ஓட்டுனர் வெளியில் இருந்து வீட்டிற்குள் இருக்கும் சிம்சனை கூப்பிட பல தடவை தொலைபேசியில் அழைத்தும் பதிலே வரவில்லை. கிட்டத்தட்ட 10:56 மணிக்கு ஒரு ஆண் உருவம் வீட்டினுள் நழைந்ததை பார்த்த அந்த லிமௌசின் ஓட்டுனர் சிம்சன் தான் வீட்டினுள் செல்வதாக புரிந்து கொண்டு மீண்டும் சிம்சனை தொடர்புகொள்ள, சிம்சனும் இந்த முறை சிறிது நேரத்தில் கிளம்புவதாக உள்ளிருந்து பதில் சொன்னார். கிளம்பி,விமான நிலையம் சென்று, விமானத்தில் சிகாகோ நகரம் சென்று விட்டார்.

அடுத்த நாள்.....

அடுத்த நாள் சிகாகோவில் ஹோடேலில் இருந்த சிம்சனிடம் தொலைபேசியின் மூலம் கொலை செய்தியை பற்றி காவல்துறையினர் கூறிய போதும் சிம்சன் அதிர்ச்சி காண்பிக்கவில்லை, கொலைக்கான காரணம் கேட்கவில்லை, எப்படி நடந்தது என்று கேட்கவில்லை......அன்று மதியம் லாஸ் ஏஞ்சலீஸ் திரும்பினார்....வந்தபோது, அவரது வீடு முழுதுமாக காவலர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டிருந்தது. வீட்டின் முன்பகுதியில் ஆங்காங்கு இருந்த ரத்த கரைகள் குறிக்கப்பட்டு இருந்தன....

ஜூன் 17, 1992
காவல்துறை விசாரணையின் போது தனது கையிலிருந்த ஆழமான வெட்டு காயத்திற்கு சரியான காரணம் சொல்ல முடியாததாலும், மேலும் குற்றத்தை சிம்சனோடு இணைக்கும் ஆதாரங்கள் சிக்கியதாலும் சிம்சனை கைது செய்ய காவல் துறையினர் முடிவு செய்தனர், சிம்சனின் வக்கீலோடு ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர். அதாவது, ஜூன் 17 ஆம் தேதி காலை 10:00 மணிக்கு சிம்சன் காவல் நிலையம் வந்து சரணடைவது என்று ஒப்பந்தம் !!!!!! ( சிம்சன் இல்லாமல் ஒரு சாதாரண citizen இருந்திருந்தால் கழுத்துல கை வெச்சி இழுத்துக்கிட்டு போயிருப்பாங்க !!!!!!!)

சரித்திர புகழ் வாய்ந்த ஊர்வலம்.......

சொன்ன நேரத்துக்கு ஓஜே வராததால், ஒருவழியாக தூக்கம் கலைஞ்சி காவலர்கள் ஓஜே வீட்டுக்கு அவரோட வக்கீலையும் கூட்டிட்டு போனா, அண்ணன் ஒரு தற்கொலை கடிதம் எழுதி வச்சிட்டு மாயமா மறைஞ்சிட்டாறு....ஒருவழியா சாயந்திரம் 06:20 மணிக்கு ஒரு வெள்ளை காரில் ஓஜே வலம் வருவதாக அதை பார்த்த ஒரு காரோட்டி தகவல் சொல்ல அப்போ ஆரம்பிச்சது சரித்திரம் புகழ் ஊர்வலம்....

ஒரு டஜன் காவல்துறை வாகனங்கள், ஹெலிகாப்டர், ஓவரா ஆர்வம் கொண்ட பொது ஜனங்களோட வாகனங்கள் பின் தொடர நம்ம ஊரு அமைச்சர் கணக்கா நம்ம அண்ணன் ஊர்வலம் வந்துக்கிட்டே இருந்தாரு. இந்த சரித்திர நிகழ்ச்சியை அமெரிக்கா முழுதும் பாக்க வேணாமா??? அதனால, எல்லா தொலைகாட்சி சானல்களும் இந்த மாப்பிள்ளை ஊர்வலத்தை நேரடி ஒளிபரப்பு செஞ்சாங்க....http://www.youtube.com/watch?v=HcyyCi2b2AY

இந்த மாப்பிள்ளை ஊர்வலம் ஒருவழியா சிம்சனின் வீட்டுக்கே வந்து முடிஞ்சதும், காவல்துறையினர் சிம்சனை கைது செஞ்சாங்க....சிம்சன் கைது செய்யப்பட்ட போது அவரிடமிருந்த $8750 பணம், ஒரு கைத்துப்பாக்கி, பாஸ்போர்ட், ஒட்டு தாடி & மீசை எல்லாம் கைப்பற்றப் பட்டன....

விசாரணை ஆயத்தங்கள்....

அமெரிக்காவில் கொலை வழக்கு விசாரணை ஆரம்பிக்குமுன் ஜூரி உறுப்பினர்கள் தேர்ந்தெடுத்தல் என்பது மிக மிக முக்கியம்...குற்றவாளியின் நிறம், இனம், குற்றத்தின் தன்மை எல்லாத்தையும் பார்த்து அந்த குற்றவாளிக்கு தண்டனை தரக்கூடிய ஜூரியாக அரசு தரப்பும், குற்றவாளிக்கு தண்டனை தர தயங்கக்கூடிய ஜூரியாக குற்றவாளியின் வழக்கறிஞரும் தேர்ந்தெடுக்க முயற்சி செய்வாங்க....இந்த இரட்டை கொலை வழக்கிலும் ஜூரி தேர்ந்தெடுப்பு, லொட்டு லொசுக்கு எல்லாம் முடிஞ்சு, 1994 ஆம் ஆண்டு சிம்சன் கிட்ட நீதிபதி ஐயா குற்றத்தை ஒப்புக்கிரீங்களான்னு கேட்டபோது, "நான் குற்றமே செய்யலை" அப்படின்னு சொன்னாரு ஓஜே.
ஜனவரி 24,1995 - விசாரணை ஆரம்பம்
நிகோல் சிம்சனின் மனைவியாக இருந்தபோது காவல்துறைக்கு சிம்சன் தன்னை கொல்லப்போவதாக உதவி கேட்டு செய்த தொலைபேசி பதிவு, சிம்சன் நிகோலிடம் கடுமையாக, மோசமான கணவராக நடந்து கொண்டதாக இருவரின் நண்பர்களும் சொன்ன சாட்சிகள், ஓஜே வீட்டு வாசலிலும், படுக்கையறையில் கைப்பற்றப்பட்ட காலுரைகளிலும், கையுரைகளிலும் காணப்பட்ட ரத்த கரைகளும் நிகோலின் ரத்தத்தோடு நன்றாக பொருந்தியது, கொலை நடந்த இடத்தில் இருந்த ரத்தத்தில் பதிந்திருந்த ஷூ தடங்கள் சிம்சனின் ஷூ அளவோடு பொருந்தியது - இப்படி அரசு தரப்பில் 72 பலமான அசைக்கமுடியாதென்று கருதப்பட்ட சாட்சிகள் நீதிமன்றத்தில் வைக்கப்பட்டன....
அரசு தரப்பு செய்த பெரிய தவறுகள்
ஜூரிகளின் எண்ணிக்கையில் இன ரீதியான பிரதிநிதித்துவம் சமமாக இருக்குமாறு செய்ய தவறியது முதல் தவறு...ரத்தக்கறை படிந்த கையுறைகளை கைப்பற்றிய காவல் துறை அதிகாரி முன்னர் ஒரு சமூகவியல் ஆராய்ச்சியாளருக்கு அளித்த பேட்டியில் கறுப்பின மக்களை அவமதிக்கும் சொல்லை கூறி அழைத்ததோடு சில சமயங்களில் சமூக விரோதிகள் தப்பிக்காது தண்டனை அடைய தான் சில சாட்சிகளை "செட்டப்" செய்துள்ளதாகவும் கூறியிருந்தார்.....அந்த பேட்டியின் பதிவு நீதிமன்றத்தில் சிம்சனின் வக்கீல்களால் தாக்கல் செய்யப்பட்டு ஜூரிகளின் மனதில் "அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட சாட்சிகள் யாவும் "செட்டப்" தானோ" என்ற சந்தேகம் விதைக்கப்பட்டது.....
அரசுதரப்பு வழக்கறிஞர் ஜூரிகளின் முன்பு சிம்சனின் குற்றத்தை மிகவும் துல்லியமா நிரூபிக்கணும் என்ற ஆவலில் நீதிமன்றத்தில் ரத்தக்கறையில் ஊறியிருந்த கையுறைகளை சிம்சனின் கைகளில் போட்டுக்காட்ட சொல்ல, சிம்சனின் கைகளில் கையுறை புக முடியவில்லை....கொலை செய்த போது உண்டான வியர்வை மற்றும் ரத்தத்தில் நன்றாக ஊறியிருந்ததால் கையுறை சுருங்கியதே அதற்கான அறிவியல் ரீதியான காரணம் என்று பின்னர் அரசு தரப்பு கூறினாலும் ஜூரிகளின் மனதில் அது பதியவில்லை.....சிம்சனின் கைகளில் கையுறை புகாததே அவர்களின் மனக்கண்ணில் பதிந்தது....http://www.youtube.com/watch?v=VssuCNMjgBg
"if it (gloves) doesnt fit, you must acquit(OJ)" என்று ஒஜேயின் வழக்கறிஞர் கூறிய "பஞ்ச் டயலாக்" அமெரிக்கா முழுதும் பிரபலமாகிவிட்டது.
அக்டோபர் 3, 1995 -விசாரணை முடிவு.....
நாடெங்கும் பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட விசாரணை முடிவு அக்டோபர் திங்கள் 3 ஆம் தேதி, 1995 ஆம் ஆண்டு, ஜூரி உறுப்பினர்களுக்குள் மூன்று மணிநேரம் விவாதம் செய்யப்பட்டு "ஓஜே குற்றம் செய்யவில்லை" என்று அறிவிக்கப்பட்டது. இந்த முடிவு வெள்ளையினத்தினருக்கும் கறுப்பின மக்களுக்கும் நடுவே ஒரு கண்ணுக்கு தெரியாத பிளவையே ஏற்படுத்தியது.....அதாவது ஓஜே குற்றம் செய்து பண பலத்தால் கிடைத்த திறமையான வழக்கறிஞர்கள் மற்றும் கறுப்பினத்தவர் பெரும்பான்மையாக அங்கம் வகித்த ஜூரி ஆகியவற்றின் உதவியால் இரட்டை கொலை வழக்கிலிருந்து விடுதலை அடைந்ததாக வெள்ளைக்காரர்கள் புலம்பினார்கள்... இனவெறியால் கருப்பினத்தை சேர்ந்த ஒரு பெரிய புள்ளியை திட்டமிட்டு கொலை வழக்கில் காவல்துறை சிக்க வைத்ததாக கறுப்பினத்தவர் கோபம் கொண்டனர்.....
ஒருவேளை ஓஜே சிம்சன் நிஜமாகவே குற்றம் செய்யாமல் கூட இருந்திருக்கலாம்....எப்படி அவர் குற்றம் செய்தார் என்று உறுதியாக சொல்ல முடியும்???? அப்படியே குற்றம் செய்திருந்தாலும் எப்படி தாமதமாக தண்டனை கிடைத்தது? ஒரு குற்றத்திற்கு இரண்டு முறை தண்டிக்க அமெரிக்க சட்டத்தில் இடமில்லையே??? அதை அடுத்த பகுதியில் பார்போம் !!!!!!!








Tuesday, October 7, 2008

சிகரெட்டுக்கு பொது இடங்களில் தடை....


அக்டோபர் இரண்டாம் தேதியில் இருந்து பொது இடங்களில் புகை பிடிக்க தடை அப்படின்னு
அரசு அறிவிச்சது சரியா தப்பா அப்படின்னு எல்லாரும் ரொம்ப பெரிசா ஆராய்ச்சி பண்றாங்க.
சில மேதாவிங்க தனி மனித சுதந்திரத்துக்கு எதிரானது அப்படின்னு வேற பெரிசா முழங்க ஆரம்பிச்சிருக்காங்க.
புகை பிடிப்பதனால் அதை செய்யற அந்த தனி மனிதருக்கு மட்டும்தான் கேடு வரும், பக்கத்துல தேமேன்னு நிக்கற கந்தசாமிக்கும், முனியம்மாவுக்கும் ஒன்னும் ஆகாது அப்படின்னா புகை பிடிக்கறதை தனி மனித சுதந்திரம் அப்படின்னு சொல்லலாம்.
ஆனா, புகை பிடிக்கறதுனால அதை செய்யற அந்த ஆசாமிக்கு புற்று நோய் வரது மட்டுமில்லை, பக்கத்துல நின்னு அந்த புகையை வேற வழியில்லாம சுவாசிக்கிற மத்தவங்களையும் 20 - 30௦ % வரை நுரையீரல் புற்றுநோய் தாக்க வாய்ப்புகள் இருக்கு!!!!
இப்படி இருக்கும்போது பொது இடங்களில் புகை பிடிப்பதை எப்படி தனி மனித சுதந்திரம் அப்படின்னு சொல்றாங்க???
ஒரு தனிப்பட்ட நபர் தனி ரூம்ல தனியா நிம்மதியா தம்மடிக்க யாரும் தடை விதிக்கவே இல்லையே !!!! உங்க தனிநபர் சுதந்திரத்துக்கு என்ன பாதிப்பு வந்துடிச்சு? சொல்லப்போனா, இப்போதான் புகை பிடிக்காத தனி நபர்களின் சுதந்திரம் (நோயற்ற வாழ்கை வாழ்வதற்கான சுதந்திரம்) காப்பாற்ற படுவதற்கான முயற்சி ஆரம்பமாயிருக்கு !!!!
அமெரிக்காவிலே மொன்டானா மாகாணத்திலே ஹெலேனா என்ற இடத்திலே நூறு சதவிகிதம் சிகரட் புகைக்கு தடா விதிச்சதும் 40% மாரடைப்பு கேசுகள் குறைஞ்சதா லோக்கல் மருத்துவமனை ஆவணங்கள் காட்டுகின்றன.
டாஸ்மாக் திறந்து வச்சுட்டு பொது இடத்தில புகை மட்டும் பிடிக்க கூடாதுன்னு சொல்றது என்ன நியாயம்னு கேக்கறாங்க.
முதல் விஷயம், ஒரு நல்லது செய்யும்போது, பக்கத்தில இருக்கிற கெட்ட விஷயத்தை காட்டி, அந்த கெட்ட விஷயம் மட்டும் இருக்கும்போது, இந்த கெட்ட விஷயத்தை ஏன் தடை பண்றீங்க அப்படின்னு அடம் பிடிக்கறது எப்படி இருக்கு தெரியுமா? என் உடம்பில தான் ஏற்கனவே கல்லீரல் கேட்டு போச்சே, கூட சேர்த்து நுரையீரல் கேட்டு போனா என்ன அப்படின்னு கேக்கற மாதிரி இருக்கு.
ஏதோ இப்போ கொஞ்சம் புத்தி மாறி, ஆட்சியில இருக்கவுங்க சமுதாயத்தின் நுரையீரலையாவது சரி பண்ண முயற்சி எடுத்திருக்காங்கன்னு சந்தோஷப்பட்டு, அதுக்கு ஆதரவு கொடுத்தா, சமுதாயத்தின் கல்லீரலையும் சரி பண்ண முயற்சி எடுக்க துணிவான ஆளுங்க வருவாங்க இல்லையா????
புகையிலை உற்பத்தியை தடை செய்யாமல், சிகரெட் பீடி உற்பத்தியை தடை செய்யாமல் பொது இடத்தில் புகை பிடிப்பதை மட்டும் தடை செய்யலாமா அப்படின்னு சில பேர் ரொம்ப "புத்திசாலித்தனமா" கேள்வி கேக்கறாங்க!!!!
முதல் விஷயம், புகை பிடிக்க தடை விதிக்கப்படலை, "பொது இடங்களில்" புகை பிடிக்காத்தான் தடை விதிக்க பட்டிருக்கு !!!!
இரண்டாவது விஷயம், புகையிலை உற்பத்தியை நம்பி லட்சக்கணக்கான ஏழை தொழிலாளர்கள் இருக்காங்க, பீடி சுத்தறதை நம்பியும் நிறைய பேர் இருக்காங்க...எல்லாரையும் ஒரே நாளில் வேலையில்லாதவங்களா எப்படி ஆக்க முடியும்? கொஞ்சம் கொஞ்சமா அவங்களுக்கு வேற தொழிலுக்கு போற மாதிரியான ஏற்பாடுகளோ, அல்லது மாற்று தொழிலுக்கு போறதுக்கான கால அவகாசமோ கொடுக்க வேண்டாமா?
இப்போ உள்ளது மாதிரி தடைகளும், அதிகமான வரி விதிப்புகளும் சிகரெட், பீடி, குட்கா போன்ற பொருள்களுக்கு விதிக்கப்பட்டால், தானாகவே அந்த தொழில்களில் வேலை வாய்ப்புகள் குறைந்து அந்த மக்கள் மாற்று தொழில்களை தேடி போவதற்கான வாய்ப்பும் உருவாகும்....
பொது இடங்களில் புகை பிடிப்பதற்கான தடையை எதிர்க்கும் புகையாளர்கள் அதுக்காக எவ்வளவுதான் விதண்டாவாதமா விவாதம் பண்ணாலும், இது ரொம்பவும் நல்ல விஷயம், அதுவும் அன்புமணி உருப்படியா செஞ்ச ஒரே நல்ல காரியம்.....
நம்ம நாட்டிலே சட்ட திட்டங்களுக்கு குறைவே இல்லை...ஏற்கனவே கொண்டுவந்த குட்கா, போதை பாக்கு தடை சட்டம், போக்குவரத்து சட்டங்கள் - இந்த சட்டங்கள் எல்லாம் "ரொம்ப சிறப்பா" கேலிக்கூத்தான கதையா நாம பாத்துக்கிட்டுத்தானே இருக்கோம்!!!!! இப்போ இந்த புகை தடை சட்டத்தை எப்படி அமல் படுத்தப் போறாங்க அப்படிங்கறதுதான் மில்லியன் டாலர் கேள்வி !!!!!!!
என்னதான் நடக்குதுன்னு பார்போம் !!!!!


Saturday, September 27, 2008

Aviyalselvi: என்ன ஒரு ஜொள்ளு !!!!!!

Aviyalselvi: என்ன ஒரு ஜொள்ளு !!!!!!